மட்டக்களப்பு - ஊத்துச்சேனையில் நீராட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

(ருத் ருத்ரா)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை பிரதேசத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.


கருணைபுரம் வாழைச்சேனையைச் சேர்ந்த சி.ஜக்ஷன், வயது (14) என்ற சிறுவனே இவ்வாறு இறந்துள்ளார்.

இவர் இன்று காலை வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த சிறுவன் தமது பாட்டியுடன் வசித்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வரட்சியான காலநிலை நிலவுவதால் பிரதேச மக்கள் அனேகமானோர் நீர் உள்ள குளங்களில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.