ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள ஆலய உற்சவத்தை முன்னிட்டு; இடம்பெறும் மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.

ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, போன்ற பிரதேச செயலகங்களும் இப்பணியில் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இதற்கமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்; தலைமையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற சிரமதானப்பணியில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான முறையில் ஆலய வளாகத்தில் இருந்த பற்றைகள், குப்பைகள் அகற்றப்பட்டதுடன் நீராடுவதற்கு பயன்படுத்தும் கிணற்றை அண்டிய பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.
அத்தோடு மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

உகந்தை மலை முருகன் ஆலயத்தை சென்றடைந்து கொண்டிருக்கும் பக்தர்களின் நலன்கருதி இந்நாட்களில் நடைபெற்ற இச்சிரமதானப்பணியினால் பக்தர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

இதேவேளை ஆலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை வழிபாடுகளிலும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் பூஜை வழிபாடுகளிலும் இணைந்து கொண்டு இறையாசி பெற்றனர்.

ஆலய உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாவதுடன் உற்சவமானது ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதியுடன் நிறைவறுகின்றது.

வழிபாடுகளில் ஒரு நாளுக்கு 200 பக்தர்கள்; மாத்திரம் நான்கு தடவைகளில் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படுவதுடன் வேறு மாவட்டத்தை சார்ந்த மக்களுக்கு அனுமதியில்லை என்பதுடன் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மாத்திரமே இவ்வருடம் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.