விசேட தேவையுடையோருக்கு வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அனுமதி


பார்வை குறைபாடு மற்றும் விசேட தேவையுள்ள வாக்காளர்கள், உதவியாளர் ஒருவருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல் அவசியம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர், பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளராக இருக்கக்கூடாது எனவும் ஏனைய அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளாகவும் சுயேட்சைக்குழு தலைவராகவும் அல்லது வாக்குச்சாவடியிலுள்ள பிரதிநிதியாகவும் இருத்தலாகாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனபடிப்படையில், பார்வை குறைபாடு மற்றும் விசேட தேவையுள்ள வாக்காளர்கள் உதவியாளர்களை அழைத்துச் செல்வதற்கான தகுதிச் சான்றிழை வாக்குச்சாவடியிலுள்ள அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு அரச வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பித்ததன் பின்னர், வாக்காளரின் தகுதிச் சான்றிதழ் பதிவு செய்யப்படும்.

இதன்பின்னரே தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிக்கு குறித்த தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க முடியும என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.