40 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை கடற்கரையோரத்தில் மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 961 கிலோ கிராம் பீடி இலைகளை கற்பிட்டி பொலிஸார் நேற்று(31) கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.வி.பி.ஜயம்பதி பண்டாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் ஜயவிக்ரம தலைமையிலான பொலிஸ் குழு குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு மூலம் குறித்த பீடி இலைகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், பீடி இலைகளை மறைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.