தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச்செயலாகும்- ரணில்


தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச்செயலாகுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் இன்று எதிர்க்காலம் தொடர்பாக அச்சமடைந்துள்ளோம். எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாது போயுள்ளன. எந்தவொரு நம்பிக்கையும் இல்லாதவர்களாகத்தான் மக்கள் காணப்படுகிறார்கள்.

இன்று நாட்டுக்கான அனைத்து வருமானங்களும் இல்லாது போயுள்ளன. நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் மாத வருமானம் அரசாங்கத்துக்கு வந்தது.

ஆனால், தற்போதைய நிலையில் அது அப்படியே சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் வெறும் 50 ஆயிரம் மில்லியன் மட்டும்தான் வருமானமாக கிடைத்தது.

அரசியல் நிலைமையும் நாட்டில் அப்படிதான் காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தற்போதைய ஆட்சியாளர்களால் ஒருபோதும் பதில் கூற முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியால்மட்டும்தான் இந்த சவாலை வெற்றிக் கொள்ள முடியும். புதியக் கட்சியை ஸ்தாபிப்பது முக்கியமல்ல. மக்களுக்கு புதிய வாழ்க்கையை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.