வைத்தியர் தாக்கியதாக கூறி ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி

(பாறுக் ஷிஹான்)
வைத்தியர் ஒருவரின் தாக்குதலினால் ஊழியர் ஒருவர் காயமடைந்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்தியரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் நேற்று(24) மாலை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவம் எந்த பின்னணியில் இடம்பெற்றது என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போதிலும் பலனளிக்கவில்லை.

இச்சம்பவத்தினை அடுத்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதி இல 5 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை ஊழியரை தாக்கிய வைத்தியர் கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்தியருடன் முரண்பட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் இதனால் வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்து கதிரைகளும் உடைந்தமை குறிப்பிடத்தக்கது.