சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடைக்கு சீல்

காரைநகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

காரைநகர் பகுதியில் உள்ள பலசரக்கு கடையொன்றினை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனைக்கு உட்படுத்திய போது, பழுதடைந்த நெத்தலிக் கருவாடுகள், மிளகு தூள் பொதிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. அத்துடன் கடை மிகுந்த சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டுள்ளது. அதேவேளை 80 சதவீத எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 08 சுருட்டுக் கட்டுக்களும் மீட்கப்பட்டன.

அவை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரால், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, நீதவான், எச்சரிக்கை ஒளிப்படம் இன்றி விற்பனைக்காக சுருட்டினை வைத்திருந்த குற்றத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், சுகாதார சீர்கேட்டுடன் கடை இயங்கியமையால் காலவரையின்றி கடையினை மூடி சீல் வைக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.