சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாவுல்லா


தேசிய காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்கு வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை, எந்த வகையிலும் நாடாளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, சட்டப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.

இதனைக் கவனத்திற்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உடனடியாக பொருத்தமற்ற உடையை மாற்றிவிட்டு சபைக்குள் வரும்படி அதாவுல்லாவுக்கு பணித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, சபையிலிருந்து வெளியேறி நாடாளுமன்ற கலாசாரத்திற்குப் பாதிப்பு அல்லாத ஆடையை அணிந்து மீண்டும் சபைக்குள் பிரவேசித்தார்.