மட்டக்களப்பை சேர்ந்த இரு தமிழர்கள் இலங்கை கபடி அணியின் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு


(ஜனா)
சர்வேதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை கபடி அணியின் சார்பாக கலந்துகொண்டு வெங்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்ததோடு, பல விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து தேசிய சர்வதேச ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்டவும் காரணமாயிருந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 8 வீரர்கள் இவ்வாறு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுள் தெரிவு செய்யப்பட்டுள்ள இரு தமிழர்களும் அண்மையில் அம்பாரையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண வர்ண கௌரவிப்பு விழாவில் சிறந்த பயிற்சிவிப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.