சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்


கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

அதற்கு பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்தது. அவரது நுரையீரல் செயல்பாடும் படிப்படியாக முன்னேறி வருகிறது என மகன் சரண் கூறினார்.

ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிர் இழந்தார். அவரின் மறைவால் திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமூக வலை தளங்களில் பலரும் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் பலரும் உருக்கமாக பேசி வருகிறார்கள்.

74 வயதாகும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜூன் 4, 1946ல் பிறந்தார். 1966ம் ஆண்டு சினிமாவுக்காக பாடும் பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்.

இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ராசியான பாடகராகவும் இருந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவர் பல படங்களில் அறிமுக பாடல்களை பாடி இருக்கிறார். ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தில் வரும் மாஸ் மரணம் பாடலை எஸ்.பி.பி பாடி இருந்தார். ஆனால் அதில் அவர் பங்கு மிக குறைந்த அளவு மட்டுமே இருந்தது. அனிருத் தான் முழு பாடலையும் பாடி இருந்தார். எஸ்.பி.பி.க்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்கி இருக்கலாம் என ரசிகர்கள் அப்போதே பேசினார்கள்.

இப்படி இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு கிழக்கிலங்கையின் முன்னணி ஊடகமான Battinews இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது