MT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை கரை திரும்பியது

(பாறுக் ஷிஹான்)
MT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை கரை திரும்பியது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள கடற்படையினரின் முகாமை அண்டிய கடற் பிரதேசத்தில் வைத்து இப்படையணி கடந்த புதன்கிழமை(9) மாலை அதிவேக டோரா படகு மூலம் கடற்படையின் பாரிய யுத்தக்கப்பலை சென்றடைந்து பின்னர் தீ விபத்து ஏற்பட்ட கப்பலை பார்வையிட்டு திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததுடன் எண்ணெய் கசிவு தொடர்பில் ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தது.

பின்னர் குறித்த ஆய்வுகள் மற்றும் திருத்த பணிகள் நிறைவடைந்த பின்னர் இன்று(15) மீண்டும் கரைக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு திரும்பிய குறித்த விசேட படையணியை கல்முனை பகுதிக்கு பஸ் ஒன்றின் ஊடாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பலின் திருத்த பணிகளுக்காக கொண்டு சென்ற தலைக்கவசங்கள் வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்கின்ற உடைகள் உபகரணங்கள் உள்ளடங்கலாக பொருட்களை மீண்டும் காவி கொண்டு வருவதை காண முடிந்தது.

இதே வேளை தீ பிடித்து விபத்திற்குள்ளான குறித்த கப்பலை சென்றடைவதற்கு இப்படையினருக்கு இலங்கை விமானப் படை விசேட பாதுகாப்பு வழங்கி வருவதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் இலங்கை கடற்படையால் குறித்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கமைய நீருக்கடியில் எந்தவொரு எண்ணெய் கசிவு இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த கப்பல் தீ விபத்தின் மூலம் நச்சுப்பொருள் வௌியேற்றுகின்றதா என்பது தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் தெரியவரவில்லை என நாரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.