சுயதனிமைப்படுத்தல் வீடுகளுக்கு பொலிசார் பாதுகாப்பளிக்க முடிவு

(காரைதீவு சகா)
பொத்துவில் பிரதேசத்தில் கொரோனாத் தொற்றுக் காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் தகவல்களைப்பெற்று தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறான தீர்மானத்தை பொத்துவில் பிரதேச கொரோனாத் தடுப்பு வழிநடத்தல் குழு நிறைவேற்றியுள்ளது.

இக்கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேசசபைத்தவிசாளர், பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு மேலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தேவையில்லாமல் பொதுமக்கள் விட்டைவிட்டு வெளியேறக்கூடாது. அநாவசியமாக சிறுவர்கள் வயோதிபர்கள் வீதிகளில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும். ஆட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்கவேண்டும்.

களியாட்டம் மற்றும் ஒன்று கூடல், திருமண நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

கொரோனாத்தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் பொதுச்சுகாதார பணியாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பாதுகாப்புத்துறையினருக்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல்.

மரணவீடுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படவேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளை விழாக்களைத் தவிர்த்தல் அவசியம்.

வெளியூரிலிருந்துவருவோர் மற்றும் வியாபாரத்திற்கு வருவோரினதும் விபரம் பதியப்பட்ட பிற்பாடே அனுமதிக்கப்படவேண்டும்.

கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களின் தகவல்களை பதிவுசெய்தல்.

கருத்தரங்கு கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொது வெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.