மோட்டார் சைக்கிள் திருட முயன்றவரிடம் கைக்குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொன்னகர் முறிகண்டியை வசிப்பிடமாக கொண்ட 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைக்குண்டுடன் யாழ்ப்பாண பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாகவும், திருட்டில் ஈடுபடும் போது கைக்குண்டினை காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.

திருடிய மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.