கல்முனை பிரதேச செயலகத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

(சர்ஜுன் லாபீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனை செயலக பிரதேச பிரிவில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 22 பயிலுனர்களை அரச துறையில் உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று(28) பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ அபூல்ஹசன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்து கொண்டு உத்தியோகபூர்வ பதவி ஏற்புகளை செய்த பின்னர் அரச தொழிலின் நியதிகள் சம்மந்தமாக விளக்கம் வழங்கினார்.

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல்.பதிருத்தீன், நைட்டா நிறுவன பயிற்சி பொறுப்பாளர் எம்.டி அஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.