மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறை !

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை இன்று(25) பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர் கோமரங்கடவல- அடம்பன பகுதியைச் சேர்ந்த உபசேனாகே நந்தசிறி (வயது 49) எனவும் தெரியவருகின்றது. 2014 ஆம் ஆண்டு 4ம் மாதம் 11 ஆம் திகதி இரண்டாவது மனைவியான அதே இடத்தைச் சேர்ந்த தயாவதி என்பவருடைய முதல் கணவரின் மகன் வீட்டுக்கு வருவதினால் அவரை வரவேண்டாம் என இரண்டாவது கணவரான உபசேனாகே நந்தசிறி என்பவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் இதே நேரம் குறித்த எதிரி மது போதையில் இருந்ததாகவும், அதேநேரம் அவரது இரண்டாவது மனைவி கணவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளை செருப்பால் அடித்ததாகவும் இதனை அடுத்து கோபம் கொண்ட கணவர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த பீங்கானை வீசியதாகவும் இதனையடுத்து மனைவியின் கழுத்தில் பட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் குறித்த எதிரிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 9ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வுபத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 296 இங்கு போடப்பட்டிருந்த தண்டனை இவர் கொலை செய்யும் போது இவருடைய மனதில் எவ்வித கசப்புத் தன்மையும் இருக்கவில்லை எனவும் கொலைக்கான காரணம் நீதிமன்றில் எடுக்கப்படவில்லை எனவும் திடீர் கோபம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த எதிரி சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த குற்றத்திற்கான தண்டனை தீர்ப்பு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களினால் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டப்பட்டது. இதன் அடிப்படையில் குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றிற்கு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.