2021 ஆண்டு பாதீடு தொடர்பில் ஆலோசனைகள் வழங்க வேண்டும்- நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்

(பாறுக் ஷிஹான்)
2021 ஆண்டு பாதீடு தொடர்பில் மக்களின் தேவை தொடர்பில் உறுப்பினர்கள் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான 4 ஆவது பிரதேச சபையின் 32 ஆவது சபை அமர்வு வியாழக்கிழமை(26) நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் 10 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 ஒக்டோபர் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2020 ஒக்டோபர் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் உரை இடம்பெற்றன. தொடர்ந்து குறை நிரப்பு பாதீடு தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அது சம்பந்தமாக ஆலோசனை பெறப்பட்டது.

மேலும் மின்சாரப் பொருட்கள் கொள்வனவு தொடர்பாக கருத்துக்கள் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டதுடன் உறுப்பினர்களின் கருத்தும் கேட்டறியப்பட்டது.

அத்துடன் வெளவாலோடை பூப்பந்தாட்ட அரங்கினை குத்தகைக்கு விடல் தொடர்பாகவும் 2021 ஆண்டு பாதீடு தொடர்பாகவும் சபையின் உறுப்பினர்கள் தத்தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து உறுப்பினர் ஏ.அப்துல் வாகிது முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய பின்னர் சபைக்கு வந்திருந்த கடிதங்கள் ஆராயப்பட்ட பின்னர் சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.