300 பி.சி.ஆர் முடிவுகள் வெளிவரவுள்ளன: தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்


(பாறுக் ஷிஹான்)

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை 58 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று(30) மதியம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

மேலும் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் ஏற்பட்ட கொவிட் 19 பரம்பல் காரணமான இது வரை
நேற்றைய பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம் 13 பேரும் இச்சந்தையுடன் தொடர்புபட்டவர் என்ற ரீதியில் மற்றுமொருவரும் திருக்கோவில் பகுதியில் இணங்கானப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எமது கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினுள் மொத்தமாக 86 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அக்கரைப்பற்று சந்தைத்தொகுதியில் மாத்திரம் 58 பேர் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.அதில் 48 பெர் அக்கரைப்பற்று பகுதியை சொந்த இடமாக கொண்டவர்கள்.நாங்கள் அக்கரைபற்றில் எடுக்கின்ற பி.சி.ஆர் மாதிரிகள் 20 வீதமானவை பொசிட்டிவ் ஆகவே காணப்படுகின்றது.எனவே மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.கடந்த 5 நாட்களாக 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.ஆனால் 300 பீ.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றோம்.ஆனவே இன்னும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க சாத்தியம் இருக்கின்றது.

இன்று கிட்டத்தட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டீஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்கின்றோம்.கிட்டத்தட்ட 1000 மாதிரிகளை பெற தீர்மானித்துள்ளோம்.இச்செயற்பாட்டை பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.