இன்று இரண்டாவது நாளாகவும் காரைதீவில் கடலோர சட்டவிரோத கட்டடங்கள் தகர்ப்பு!

(காரைதீவு சகா)
காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மீன்வாடிகள் இன்று(24) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் கனரகவாகனத்தால் அகற்றப்பட்டன.

கடலோரத்தில் 25மீற்றருக்குட்பட்ட கட்டடங்களே முதற்கட்டமாக கனரகவாகனத்தால் அகற்றப்பட்டன. இதற்கான உத்தியோகபுர்வ அறிவித்தல்கள் குறித்த மீனவர்களுக்கு ஒரு மாதகாலத்திற்கு முன்னரே பிரதேச செயலகத்தால் அனுப்பப்பட்டிருந்தன.

இன்றுகாலை 10மணியளவில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி எம்.எஸ்.எ.மகுறூப் காணி உத்தியோகத்தர் இரா.ரமேஸ் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் ஆகியோர் அங்கு சமுகமளித்தனர்.

ஒருசில மீனவர்கள் கட்டடத்தை திடீரென அகற்றமுடியாது என தவிசாளர் பிரதசசெயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலீடுபட்டனர்.

இதனால் அகற்றும்பணி ஒருசில நிமிடங்கள் தடைபட்டிருந்தன. சட்டத்தின்படி அவற்றை அகற்றவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதையடுத்து அதனை அகற்ற இணங்கினார்கள்.

இப்பகுதியில் கடலோரப் பாதுகாப்பு வலய எல்லை 65 மீற்றராக இருந்திற்றபோதிலும் கடற்றொழிலுக்கு மிகவும் குந்தகமாக இருக்கக்கூடிய முதல் 25மீற்றருக்குட்பட்ட சட்டவிரோத கட்டடங்களே இன்று இரண்டாவது நாளாகவும் அகற்றப்பட்டன.