சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜை உயிரிழப்பு !

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த கைதி நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

அதன்படி 45 வயதான பாகிஸ்தான் பிரஜை சிறுநீரக செயலிழப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். மஹர சிறைச்சாலையிலிருந்து ஒரு வார காலத்திற்குள் பதிவான இரண்டாவது உயிரிழப்பு சம்பவம் இதுவாகும். மஹர சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 82 வயதான கைதியொருவர் கடந்த திங்கட்கிழமை வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.