மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து விழுந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

(எச்.எம்.எம்.பர்ஸான்)
புதிதாக கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று(29) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த இருவரே மின்சாரம் தாக்கிய நிலையில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்துக்கு மேலாக சென்ற பிரதான மின் கம்பியின் மின்சாரம் இருவரிலும் தாக்கியதில் இருவரும் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

இவ்வாறு ஆபத்துக்குள்ளான இருவரும் அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மின் கம்பி அறுந்து காணப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் தடைப்பட்ட மின்சாரத்தை சீர்செய்யும் பணியில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.