மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வாகனத்தை தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பலி !

குருணாகல், கொபேகனே பகுதியில் நேற்றிரவு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகளை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோதமாக மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக பொலிஸார் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வாகனமொன்றை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்தபோது, அது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த கொபேகனே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 32 வயதான கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.