யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று


இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரினாலும் நினைவு கூறப்படுகின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது போராளியாக கருதப்படும் சங்கர் என்ற செ.சத்தியநாதன், உயிரிழந்த நாளை மையப்படுத்தி, 1989ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் வடக்கு, கிழக்கு மக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களினால் மாவீரர் நாளை பொதுவெளியில் மக்கள் ஒன்றுத்திரண்டு அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாக முன்னிலையாகி தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது.

மேலும் குறித்த தடை உத்தரவுக்கு எதிராக மாவீரர்களின் உறவினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆகவே, இம்முறை மாவீரர் நாளினை  வீடுகளில் இருந்தே அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.