கொழும்புக்கு இனி சொந்த வாகனத்தில் செல்ல முடியாது?


Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேருந்துகளுக்கான இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் குறித்த தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, Park & Ride போக்குவரத்து செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம், கொழும்பு நகருக்குள் வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சொந்த வாகனங்களில் வருகை தருபவர்கள், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளின் மூலம் கொழும்புக்கு வருகை தர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த பேருந்துகளில் wifi மற்றும் GPS கண்காணிப்பு வசதி ஆகியன காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பணப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இலத்திரனியல் பயணச் சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள battinews  பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள் -