மகளை இளைஞன் ஒருவர் கடத்திச்சென்றதால் இளம் தாயார் தூக்கிட்டு தற்கொலை : தாந்தாமலையில் சம்பவம்

(மண்டூர் ஷமி )
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு,தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் இளம் குடும்பப்பெண் ஏரம்பமூர்த்தி-நிஷாந்தி வயது 37 என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது-
அண்மையில் உயர்தர பிரிவில் பரிட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை அவரின் விருப்பமின்றி அப்பிரதேச இளைஞன் ஒருவர் திருமணம் முடிக்க கடத்திச் சென்ற நிலையில் சம்பவத்தினை நினைத்து மனமுடைந்த நிலையில் இருந்த தாயார் தனது வீட்டில் யாரும் இல்லா நிலையில் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணையின் போது அறிய முடிந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்