மட்டக்களப்பு நகரில் பழுதடைந்த மரக்கறிகளை விற்பனை செய்த விற்பனை நிலையம் முற்றுகை


மட்டக்களப்பு நகரில் பாவனைக்குதவாத மரக்கறிகளை விற்பனை செய்த மரக்கறி விற்பனை நிலையம் ஒன்று இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பன்சல வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாகாண மேற்பார்வை பரிசோதகர் கே.ஜெயரஞ்சன் தலைமையில் கோட்டை முனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

குறித்த மரக்கறி விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலை மிக மோசமான நிலையிலிருந்ததுடன் அதனுள் அழுகிய நிலையில் பெருமளவான மரக்கறிகள் மீட்கப்பட்டது.

அத்துடன் வர்த்தக நிலையங்களில் முன்பாகவும் பாவனைக்குதவாத நிலையில் மரக்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து 220 கிலோவுக்கு அதிகமான பாவனைக்குதவாத மரக்கறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.