யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்து வந்த ஒருவர் கைது!



யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கலையகத்துக்கு அண்மையில் இயங்கி வருகின்ற விடுதி ஒன்றிலேயே இவ்வாறு மதுபானக் கலப்படம் நடைபெற்று வந்துள்ளது.

இந் நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மதுபானத்துடன் கலப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கலவைகள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில், யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.பிரதீப் தலைமையில் சென்ற அணியினரே ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.