காத்தான்குடியில் தங்கசங்கிலியை அறுத்து சென்ற இளைஞர்கள் இருவர் கைது!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா, பூநொச்சிமுனை பிரதேசத்தில் வீதியால் சென்ற பெண்களின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை அறுத்த இரு கொள்ளையர்களை இன்று வெள்ளிக்கிழமை பொலிசார் கைது செய்ததுள்ளனர்.

அண்மை காலமாக தாளங்குடா, பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும் பெண்களை இலக்குவைத்து கொள்ளையர்கள் மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிவருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் நேற்று வியாழக்கிழமை தனிமையில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டர்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 19 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட 2 பவுண் தங்கச் சங்கிலி ஒன்றையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தாளங்குடா மற்றும் பூநொச்சிமுனை இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.