வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு இனிதே நிறைவு!


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடத்துவதற்கு முன்பாக கடல் தீர்த்தம் எடுத்து விளக்கு எரிக்கும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றமை வழமையாகும்.

அதற்கமைய இம்முறையும், கடல் தீர்த்தம் (உவர் நீர்) எடுத்து வரப்பட்டு, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு பானையில் இடப்பட்டு, அதன்பின்னர் உப்பு நீர் விளக்கு, நேற்று (திங்கட்கிழமை) ஏற்றப்பட்டது.

குறித்த விளக்கு தொடர்ந்து எரியவிடப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் திங்கள் கிழமை அதிகாலை, இந்த உவர் நீர் விளக்கானது மடைப் பண்டங்களுடன் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அதன்பின்னரே வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 25 பேருக்கு மாத்திரமே சடங்கு நடைமுறைகளை செய்வதற்கு இம்முறை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.