பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !


நாடு முழுவதும் பயணத் தடை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவடைந்த போதிலும், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு விரைவாக பரவுவதை சுட்டிக்காட்டிய இராணுவ தளபதி, பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டார்.

இன்று முதல், மே 31 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்படும் நேரத்தில் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இன்று முதல் அடையாள அட்டை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தாலும், வேலைக்குச் செல்வோருக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பொருட்கொள்வனவு அல்லது மளிகை பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் தேசிய அடையாள அட்டை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.