குச்சவெளியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!


திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட சண்டையில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐந்தாம் வட்டாரம்- திரியாய், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 18, 20, 21 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக இருந்து வந்த பகைமை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கங்கள் பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு குழுவிலும் இருந்து நால்வரை கைது செய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.