லாஃப் எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு



கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுவது குறித்து இதுவரை தங்களுக்கு அறிவிப்பு வரவில்லை என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளிவ்.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்தார்.

டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தது.

கடந்த சில நாட்களாக பதிவான சமையல் எரிவாயு கொள்கலன் சார்ந்த வெடிப்பு சம்பவங்களை மையப்படுத்தியே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.