காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு - 3 மாணவர்கள் கைது


பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெல்மடுல்ல, பரண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த மாணவன் அப்பகுதியில் 10ம் வகுப்பில் படித்து வருவது தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் கடந்த 26 ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், அவர் வீடு திரும்பாதமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27 ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று (28) குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் காணாமல் போனது குறித்து யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்ற மூன்று மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.