மட்டக்களப்பு பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் வழக்கு விசாரணை



மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இன்றைய வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் கோரப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து விதுசன் எனும் இளைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் உள்ள போது உயிரிழந்திருந்தார்.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பக்கட்டை விழுங்கியதால் அது வயிற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை குறித்த இளைஞனின் குடும்பத்தினர் மறுத்திருந்ததுடன் குறித்த இளைஞனை பொலிஸார் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இளைஞனின் மரணம் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உடல் பரிசோதனைகள் முடிவுற்று மீண்டும் உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பற்கு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

உடலினை கொண்டு வருவதற்கு வாகனத்திற்கான டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் இரண்டு வாரங்களில் உடலை ஒப்படைப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில் குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.