விறகு வெட்ட சென்றவர் சடலமாக மீட்பு !



(ரவ்பீக் பாயிஸ்) 

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் விறகுக்குச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா போலீசார் தெரிவித்தனர்

கிண்ணியாவில் இருந்து நேற்று விறகு வெட்டுவதற்காக திருகோணமலை முத்துநகர் பிரதேசத்திற்கு சென்ற நபர் இன்று (24) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ரஹ்மானியா நகர், கிண்ணியா - 01 ஐ சேர்ந்த அப்துல் கபூர் (வயது-65) எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கிண்ணியா பிரதேசத்தில் இருந்து நேற்று காலை விறகு வெட்டுவதற்காக முத்துநகர் பிரதேசத்திற்கு செல்வதாக குடும்பத்தினருக்கு தெரிவித்த நிலையில் நேற்று இரவு வரை அவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த நபரை குடும்பத்தினர் தேடி வந்த சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை முத்துநகர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.