வெளிநாட்டு யுவதியை துஷ்பிரயோகம் செய்த உணவக உரிமையாளர் உட்பட மூவர் கைது!


இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 40, 28 மற்றும் 23 வயதுடைய உணவக உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்கள் இருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மியன்மார் யுவதி விஜயம் ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று தங்குவதற்காக பெந்தோட்டாவில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

தனது தோழி ஒருவருடன் பெந்தோட்டையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்று உணவு வாங்கி வந்த நிலையில், அதில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் அவரது தோழி மீண்டும் ஹோட்டலுக்குச் சென்று சுயநினைவுக்கு வந்த நிலையில் தனது தோழி அங்கு இல்லாததை அறிந்து அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அப்போது துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பெண்ணும் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதனடிப்படையில் 26 வயதுடைய வெளிநாட்டு யுவதியிடம் வாக்குமூலம் பெற்று பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.