கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தினரின் வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா இன்றைய தினம் (26.06.2022) காலை 9.00 மணிக்கு கிரான் குளம் சீமூன் கார்டன் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.சி.புவனேந்திரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதில் விசேட அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி N. சத்தியானந்தி அவர்களும் கலந்து சிறப்பித்தார். குறித்த நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல் பீடம். மருத்துவ பீடம் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு எமது கிராமத்தில் இருந்து இலங்கை நாடளாவிய ரீதியிலான சேவைகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிரான்குளம் மண்ணின் மைந்தனும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களுக்கு கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தினரால் வாழ்த்துப்பா வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்