மட்டக்களப்பில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து – 5 பேர் காயம்!


மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (திங்கட்கிழமை) காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஐவரும் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.