கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணம் அபகரிப்பு


திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மாங்காய் ஊற்று பகுதியில் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (26) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், தாயும் மகளும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தாயின் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தாயும், மகளும் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் கன்னியா மாங்காய் ஊற்று பகுதியைச் சேர்ந்த எம். சுவிஸ்மா (35வயது) மற்றும் அவரது மகள் ஹரிஸ்டிகா (10வயது) ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் 30க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளுக்குநாள் திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு கோணங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், அறிமுகமில்லாத புதிய நபர்கள் தங்களது பிரதேசங்களில் சுற்றித் திரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.