மருந்துகளைப் பெற்றுக்கொள்ள புதிய முறைமை

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பிலும் அவை விநியோகிக்கப்படும் இடம் தொடர்பிலும் தகவல்களை வழங்க புதிய முறைமை ஒன்று அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக பல அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு அரச வைத்தியசாலையிலும் தனியார் மருந்தகங்களிலும் தட்டுபாடு நிலவுகின்றன. இதன்காரணமாக, நோயாளர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியம் மற்றும் இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பில் 045 22 75 636 என்ற இலக்கத்திற்கோ அல்லது 077 19 77 177 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்க தலைவர் சந்திக கன்கந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லாத சந்தர்ப்பத்தில் அது தொடர்பில், ஆராய்வதற்கான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுவசரிய தகவல் சேவையின் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.