அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச்சாவடி அருகில் சுற்றிவளைப்பு


அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25 சிறிய கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்புநிலையமொன்றில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும் சிறிய டீசல் கொள்கலன்களே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளது.

குறித்தநிலையமொன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இன்று நண்பகல் 25 சிறிய கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டு அக்கரைப்பற்று பிரதேசம் நோக்கி புறப்படுவதாக பொதுமக்கள் அறிந்து கொண்டதுடன் பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகே ஒன்று கூடிய மக்கள் உழவு இயந்திரத்தை தடுத்து நிறுத்தி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் உழவு இயந்திரத்தை கைப்பற்றி அதில் உள்ள கலன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு உழவு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.

எனினும் பொலிஸ் நிலையம் வருகைதந்த சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவை தங்களது அமைப்பிற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் பொலிசாரிடம் கையளித்தனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைஅக்கரைப்பற்றுபொலிசார் ஆரம்பித்துள்ளனர்.