மட்டக்களப்பு வாகனேரி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி காட்டுப்பகுதியில் இயங்கிவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வேலைத்திட்டத்தினை இலங்கை மதுவரித்திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை மற்றும் உற்பத்திகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் தலைமையில் வாகனேரிப்பகுதியில் உள்ள குளத்துமடு காடுகளில் நேற்று விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மறைவான நிலையில் பாரியளவில் கசிப்பு உற்பத்திசெய்யும் இடம் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவு கோட்டாக்களும் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேநேரம் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஐந்து பேர் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்

இதன்போது ஐந்து பறல்கள் கோடா மீட்கப்பட்டதாகவும் ஒரு பறலில் 150,000மில்லி லீற்றர் அடிப்படையில் ஐந்து பரல்களிலும் 750,000 மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இதேபோன்று 3500மில்லி லீற்றர் கசிப்பு உடமைகளில் வைத்திருந்ததற்காக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் அத்தியட்சகர் முன்வைத்துள்ளார்.