போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது!


கொழும்பில் இன்று (29) காலை 6 மணித்தியாலங்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்த இந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய சோதனையில் 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 1 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, தெற்கிலும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.