பேர வாவியை இலவசமாக சுத்தம் செய்து அழகுபடுத்த ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் !


கொழும்பில் உள்ள பேர வாவியை இலவசமாக சுத்தம் செய்து அழகுபடுத்த ஜப்பானிய நிறுவனம் ஒன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த நிறுவனம் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 06 மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ளதுடன், திட்டத்துக்கான மொத்தச் செலவு 3 மில்லியன் டொலராகும். இது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து மானியமாக இலங்கையில் பெறப்பட உள்ளது.

பேர வாவி மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால் அதனை சுத்தப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், கங்காராம விஹாராதிபதி ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தங்கள் பெப்ரவரி முதல் வாரத்தில் கையெழுத்தாகி, அதன் பிறகு திட்டம் ஆரம்பமாகவுள்ளது.