பாராளுமன்றத்தை வீடியோ பதிவு செய்த இரு சந்தேக நபர்கள் கைது!




பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இருவரை இன்று (29) பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாராளுமன்ற மைதானத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியின் ஊடாக தியவன்னா ஓயா கரைக்கு வந்து அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை வீடியோ எடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தை வீடியோ படம் எடுத்ததன் நோக்கம் இதுவரை வெளியாகவில்லை என்றும், இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த இருவராலும் பிடிக்கப்பட்ட காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த அதிகாரி, சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.