மூன்று பிள்ளைகளின் தந்தை ஆற்றில் விழுந்து பலி!



கெசல்கமு ஓயாவில் விழுந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று (29) பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவான தோட்டத்தில் வசிக்கும் பெரியண்ணன் கருப்பையா என்ற 75 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே கெசல்கமு ஓயாவில் இவ்வாறு விழுந்துள்ளார்.

குறித்த நபர், கிளினிக் அட்டையுடன் காலை வீட்டை விட்டு வெளியேறி, கெசல்கமு ஓயாவுக்குச் செல்லும் குறுகிய வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​ பாலத்திலிருந்து கெசல்கமு ஓயாவில் விழுந்து சிறிது தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கெசல்கமு ஓயாவிற்கு அருகில் புல் வெட்டச் சென்ற நபரொருவர், கெசல்கமு ஓயாவில் சடலம் ஒன்று இருப்பதாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் பின்னர் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலை அனுப்பி வைக்கவுள்ளதாக பகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.