மின் துண்டிக்கப்பட்டால் முறைப்பாடளிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை. அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0775687387 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் , consumers@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் , 0112392641 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்குமாறு கடந்த 25 ஆம் திகதி முதல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்து வருகிறது. அதற்கான பல தரப்பு பேச்சுவார்த்தைகளையும் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் மின்சாரசபை தொடர்ந்தும் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் , அதனை மீறி மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

மின் துண்டிப்பு விவகாரத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக , இணக்கப்பாட்டை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டீ.யு.கே.மாபா பதிரண மற்றும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எஸ்.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.