வெளிநாடுகளின் ஒதுக்கீட்டில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டம் : சஜித் பிரேமதாஸ!



உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியின் பின்னர் மத்திய அரசிலிருந்தோ அல்லது மாகாண சபையிலிருந்தோ நிதி ஒதுக்கீட்டைப் பெறமுடியாவிட்டால், தற்போதைய பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களைப் போன்று வெளிநாடுகளின் ஒதுக்கீட்டில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டம் ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (27) மகாஓயாவில் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது நாட்டிலுள்ள செல்வந்தர்களுடன் தொடர்பு கொண்டு உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை ஏற்பாடு செய்யும் முறைமையும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இச்செயற்பாட்டின் ஊடாக மத்திய அரசிடம் பணம் இல்லாவிட்டாலும் கட்சி பேதமின்றி உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை சுமூகமாக முன்னெடுக்க இயலுமையுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும்குறிப்பிட்டார்.

2019 இல் நாட்டு மக்களை ஏமாற்றியது போன்று 2023 இல் நாட்டை அழிக்க முயலும் அரசியல்வாதிகளை விடநாட்டின் அபிவிருத்தியை நடைமுறையில் நனவாக்க அர்ப்பணித்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எந்தக் கட்சிகள் தம்பட்டம் அடித்தாலும், இவ்வாண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் மட்டுமே புதிய வேட்பாளர்கள் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களை தாங்கள் நினைத்த விதத்தில் கையால முடியாது எனவும், தெரிவாகும் உறுப்பினர்களை தொடர் நெறிமுறைகளுக்கு கட்சி உட்படுத்தியுள்ளதாகவும், இதன்பிரகாரம், ஒப்பந்தம் போடுவது முதல் அரசியல் டீலில் ஈடுபடுவது வரை அனைத்து ஊழல், முறைகேடுகளையும் மேற்கொள்வதற்கான பிரவேசம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் நடத்தை விதிகளை மீறினால், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தீர்வற்ற நாட்டுக்குத் தீர்வு எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் மகாஓயாவில் நேற்று (27) ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.