புதுவருடத்தையொட்டி 14ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி பகிர்ந்தளிப்பு!

(வி.ரி. சகாதேவராஜா)

அரசின் புதிய எழுச்சி திட்டத்திற்கமைய புதுவருடத்தையொட்டி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வருமானம் குறைந்த சுமார் 14ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 10கிலோ அரிசி இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் 2022/2023பெரும்போக  நெல் கொள்வனவு மற்றும் அரிசி விநியோக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  அரிசி விநியோகம் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

2022/2023 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் நெல் கையிருப்பினை அரிசியாக்கல் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி அடையாளம் காணப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு  களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஜனாதிபதி  பங்கேற்புடனான தேசிய நிகழ்விற்கு சமாந்தரமானதாக  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 13429 குடும்பங்கள் இத் திட்டத்தில் பயனடைய உள்ளனர்.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமூக சேவை உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லானது தெரிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் அரிசியினை 10 கிலோ கிராம் பைகளாக பொதிசெய்யப்பட்டு 

மாதமொன்றுக்கு 10 கிலோ எனும் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு  அடையாளம் காணப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.