அம்பாறை , சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் ஓடாவி வேலைக்கு சென்ற ,சாய்ந்தமருது பிரிவு 16 அஹமட் வீதியை சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் (வயது-29) என்பவர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் தவறி விழுந்து ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(8) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் மரணமடைந்த இளம் குடும்பஸ்தரை காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட மாவடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் றிபான்(வயது-42) என்பவர் காயமடைந்து அபாயக் குரல் எழுப்பிய நிலையில் ஏனையோரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் மரண விசாரணை நடவடிக்கையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணத்திற்கான காரணத்தை கண்டறிய கொழும்பில் உள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சடலத்தின் சில பகுதிகள் சான்றிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த கடை கட்டுமான வேலை தளத்தில் மூவர் இருந்ததுடன் சாய்ந்தமருது பொலிஸாரின் புலன் விசாரணை மற்றும் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸ் தடயவியல் (SOCO) பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.