மட்டக்களப்பு நகரில் டெங்குவின் தாக்கம் அதிகமானதால் கட்டுப்படுத்தும் சிரமதானப் பணி


(சிவம்)

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவினுள் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்; தொற்று நோயியல் பிரிவிற்கான சுகாதார வைத்திய அதிகாரி எஸ். கிரிசுதனின் ஆலோசனைக்கிணங்க அதனைக் கட்டப்படுத்தும் நோக்கோடு தொடர்ச்சியாக துப்பரவு செய்யும் பணிகள் மற்றும் புகை விசிறல் என்பன இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக 2 ஆவது சுகாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இன்று (09) இருதயபுரம் பொதுச் சுகாதார பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்கேணி, ஜயந்திபுரம் பகுதிகளின் வீடுகள் மற்றும் சுற்றாடல் என்பன பரிசீலிக்கப்பட்டதோடு நீர் நிலைகள் மற்றும் கிணறுகளும் பரிசோதிக்கப்பட்டன. அத்தோடு கறுவேப்பங்கேணி பிரதான வடிகானில் அடைத்துள்ள ஆத்து வாளையை சுகாதாரத் தொழிலாளர்கள் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி. சரவணபவன், மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், உறுப்பினர்களான யூ.பிலிப், த. இராஜேந்திரன், இ. அசோக், து.மதன், கு..காந்தராஜா, பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான கே.யேசுராஜன், எஸ்.அமுதபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை மாலை தாமரைக்கேணி குடியிருப்ப பிரதேசங்களில் புகை விசுறல் இடம்பெற்றதோடு கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பிரிவினரால்
 டெங்குக் குடம்பிகள் பெருகும் இடங்களை வைத்திருந்தவர்களுக்கு தகுதி தராதரங்கள் பார்க்கப்படாது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோடு கிணறுகளில் மீன்களும் இடப்பட்டன.
பொது மக்கள் ஒத்துழைக்காமல் உள்ளதும்; மற்றும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் பெருங்கவலையளிக்கின்றது என டெங்கு தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.